search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வெள்ளம்"

    • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
    • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

    ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • உளுந்து, பாசிப்பயிறு, சோளம் போன்ற விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாயின.
    • பாதிப்படைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் முப்பிலிபட்டி ராஜாங்குளத்தின் தென்பக்ககரை உடைந்ததால் அந்த நீர் புதியம்புத்தூர் திருச்சிற்றம்பலபேரி குளத்திற்கு வந்தது. ஏற்கனவே நிரம்பிய நிலையில் இருந்த இந்த குளம் இந்த நீர்வரத்தால் உடைப்பு ஏற்பட்டு அதிகமான நீர் செல்ல ஆரம்பித்தது.

    இந்த மழை நீர் கரைப்பகுதியில் இருக்கும் நீராவிமேடு, மேலமடம் நடுவக்குறிச்சி, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் சூழ்ந்தது. அதிகளவு மழைநீர் இந்த ஓடையில் சென்றதால் புதியம்புத்தூர் ஆர்.சி. தெரு, பேட்டை தெரு, பவுண்டு தெரு, தெற்கு காலனி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 35 மண்சுவர் வீடுகள் முழுமையாக இடிந்தது.

    புதியம்புத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் ரோட்டை விட 3 அடி தாழ்வாக இருந்தது. சமீபத்தில் பெய்த கன மழை நீர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தேங்கி நின்றது. அதனை கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக், கிராம உதவியாளர் தங்கமாராசா ஆகியோர் மின் மோட்டாரை வைத்து அகற்றினர்.

    சந்தன மாரியம்மன் கோவில் அருகில் பழமை வாய்ந்த அத்திமரம் வேருடன் அருகிலுள்ள வீடுகள் மீதுசாய்ந்து வீடுகள் இடிந்து விழுந்தது. சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நின்றதால் ரோட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்தன.

    மழையால் பூக்கும் தருவாயில் இருந்தகம்பு, உளுந்து, பாசிப்பயிறு, சோளம் போன்ற விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாயின. எனவே இப்பகுதிகளை வெள்ளம் சேதம் அடைந்த பகுதி என அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல் வீடு இடிந்தவர்கள், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்படைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
    • குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் தரைதளத்தில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகளில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதனால் வீடுகளில் உள்ள மெத்தை, சோபா, கட்டில், நாற்காலி, மேஜை, துணிமணிகள், புத்தகங்கள் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகளில் டி.வி, வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    வெள்ளம் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பிய மக்கள் மழை வெள்ளத்தால் சேதமான சோபா, மெத்தை உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கு வெளியே உள்ள தெருக்களிலும், அருகில் உள்ள குப்பை தொட்டிகளிலும் வீசினார்கள். இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

    எனவே வீடுகளில் மழையால் சேதம் அடைந்த மெத்தை, சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் சாலைகளில் வீச வேண்டாம் என்றும், மாநகராட்சியின் வாகனத்தை போன் செய்து அழைத்தால் அவர்கள் வீட்டிற்கே வந்து சோபா, மெத்தை உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரித்து செல்வார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    வீடுகளில் மழைநீரால் சேதம் அடைந்த சோபாக்கள், மெத்தை உள்ளிட்ட பொருட்களை குப்பை தொட்டி அல்லது தெருக்களில் வீசி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். கட்டணம் இல்லாத தொலை பேசி எண்ணான 18005712069 என்ற எண்ணில் அழைத்தால் உங்கள் வீட்டுக்கே வந்து குப்பை கழிவுகளை சேகரித்து செல்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி பலத்த வெள்ளசேதம் ஏற்பட்டது. இதில் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட மதனபுரம், அமுதம் நகர், இந்திராநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பயனாளிகளின் பெயர்பட்டியல் அந்தந்த ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

    இதில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மதனபுரம், அமுதம் நகரில் உள்ள ரேசன்கடைகளில் சுமார் 400 பேரின் பெயர்கள் வெள்ள நிவாரண உதவி தொகை வழங்குவதற்கான பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதன் காரணமாக முடிச்சூர் மதனபுரம் பகுதியில் நிவாரண தொகை வழங்கும் ரேசன் கடையில் கூட்டமின்றி காணப்படுகிறது. அதே சமயம் நிவாரன தொகை வழங்கும் பட்டியலில் விடுபட்டவர்கள் நிவாரண தொகை பெறுவதற்காக விண்ணப்பம் வாங்கி அதனை பூர்த்தி செய்து கொடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

    முடிச்சூரில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
    • குடிநீர் மாசு படுவதாலும் தொற்றுக்கள் ஏற்படும். வயிற்று போக்குக்கு முக்கிய காரணம் இதுவே.

    சென்னை:

    பெரு மழையால் ஏற்படும் பெரும் பாதிப்புகளில் இருந்து மீண்டாலும் அதன் பிறகு பல்வேறு வகையான நோய்கள் பரவும்.

    குறிப்பாக மழைக் காலத்துக்கு பிறகு வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல், டைபாய்டு ஆகியவை வழக்கமாக வரும். இந்த நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

    தண்ணீர் மட்டுமல்ல மண்ணில் இருந்தும் நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இதுபற்றி டாக்டர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

    மழைக் காலங்களில் தண்ணீர் அசுத்தமடைவதால் அதில் இருந்து பரவும் வைரஸ்கள் மனிதர்களையம் தாக்குகிறது. அதனால்தான் மழைக் காலங்களில் எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இவற்றை தவிர்க்க மழைக் காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

    தெருக்களில் தேங்கிய தண்ணீர் மட்டும்ல, தண்ணீர் வடிந்த பிறகு மண்ணில் இருந்தும் புதிய வகை தொற்றுக்கள் உருவாகலாம்.

    பெருவெள்ள பாதிப்புகளுக்கு பிறகு மீலியாய்டோகிஸ் என்ற பாக்டீரியா தொற்றும் வரலாம். ஆனால் நமது நாட்டில் இது அரிதானது.

    பொதுவாக மண்ணில் இருந்து பரவும் இந்த மாதிரி தொற்றுக்கள் கால்கள், உடலில் சிறு காயங்கள் இருந்தாலும் மாசடைந்த தண்ணீரில் பாதுகாப்பு இல்லாமல் நடக்கும் போது தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    அதே போல் குடிநீர் மாசு படுவதாலும் தொற்றுக்கள் ஏற்படும். வயிற்று போக்குக்கு முக்கிய காரணம் இதுவே.

    எனவே மழை காலங்களில் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்க வேண்டும்.

    சமைக்கும் உணவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வெறும் காலுடன் அழுக்கடைந்த தண்ணீரில் நடப்பதை தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முந்தல் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
    • மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் போடிமெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

    போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. போடிமெட்டு மலைச்சாலையில் 8 மற்றும் 11ம் கொண்டைஊசி வளைவுகளில் பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதை அகற்றாமல் போக்குவரத்திற்கு மட்டும் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் மண்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் மறிக்கப்பட்டது. மேலும் ராட்சதபாறைகளும் சாலைகளில் உருண்டன. இதனை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 10 மணிமுதல் போடிமெட்டு மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ்டோங்கரே அறிவித்தார்.

    மேலும் முந்தல் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் கேரளாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து வாகனங்களும் அடிவாரத்திலேயே நிறுத்தப்பட்டது. ஜே.சி.பி. எந்திரங்களுடன் மலைச்சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் குமுளி மலைச்சாலையில் மாதா கோவில் அருகே கொண்டைஊசி வளைவு பகுதியில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. குமுளி தமிழக சோதனை சாவடி அருகே மரம் மற்றும் பாறைகள் உருண்டன. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் மற்றும் கூடலூர் வனச்சரகர் முரளிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று ஜே.சி.பி எந்திரம் மூலம் மரங்கள் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து இன்று காலை முதல் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    இருந்தபோதும் மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.
    • உப்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சில நாட்கள் விட்டு விட்டு தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி கோடை காலம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவும் காணப்பட்டது.

    இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி தஞ்சையில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. இடைவிடாமல் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. குறிப்பாக ஒரத்தநாட்டில் அதி கனமழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 86.10 மி.மீ. மழை கொட்டியது. இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, வெட்டிக்காடு, மதுக்கூர், பேராவூரணி, அதிராம்பட்டினம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.

    தொடர் மழையால் பாபநாசம் அருகே உள்ள வளத்தாமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த இளையராஜா மனைவி ராஜேஸ்வரி என்பவரது குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து அரசின் உரிய நிவாரணம் வழங்க தாசில்தார் மணிகண்டன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.


    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. தொடர் மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலம், குடவாசலில் 50 மி.மீ. மழை கொட்டியது.

    நாகை மாவட்டத்தில் பகல் முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருக்குவளையில் 83 மி.மீ. மழை கொட்டியது. இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி , தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரையிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் மாவட்டத்தில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. உப்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கின.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 1650.48 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    ஒரத்தநாடு-86.10, திருக்குவளை-83, செம்பனார்கோவில்-62.4, வேளாங்கண்ணி-62, மயிலாடுதுறை-61, பட்டுக்கோட்டை-60,

    திருவிடைமருதூர்-52.80, மதுக்கூர்-52.60, நன்னிலம்-50, திருவாரூர்-30, சீர்காழி-41, தரங்கம்பாடி-29.3, தஞ்சாவூர்-27.20.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. போதிய காவிரி நீர் இல்லாததால் பயிர்கள் வாடி வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் மட்டுமே பயிர்களுக்கு முழுமையான தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

    • மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று காலை முதல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி இன்று காலை 6.30 மணி வரையிலும் 323.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அம்பை, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட 18 மழை மானிகளில் இன்று காலை வரை எடுக்கப்பட்ட அளவீட்டின்படி அதிகபட்சமாக ராதாபுரம் பகுதியில் 36 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் மற்றும் களக்காடு பகுதிகளில் 33 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    அணைகளை பொறுத்தவரை 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 125.20 அடியை எட்டியுள்ளது. அந்த அணைக்கு நேற்று 530 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று 861 கனஅடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.05 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் நீர் நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தாலுகா வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெல்லை டவுன், சந்திப்பு பஸ் நிலையம், ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதி, பழையபேட்டை, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, புறவழிச்சாலைகள், தச்சநல்லூர், சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.


    இன்று அதிகாலை முதல் களக்காடு, மாவடி, திருக்குறுங்குடி, பத்மநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

    இதையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை தொடர்ந்து திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 48 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி, காடல்குடி ஆகிய இடங்களில் நேற்று தொடங்கி இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளிலும் மழை பெய்த வண்ணனம் இருக்கிறது.

    தூத்துக்குடி மாநகர பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அங்கு தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. ஒரு சில தெருக்களில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஸ்ரீவைகுண்டத்தில் 10 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 25 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் காலை 7 மணி வரையிலும் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும் போது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, ஆய்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ரம்மியமான சூழல் நிலவுவதோடு, இதமான காற்றும் வீசி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டதில் பெரும் பகுதி அரசுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
    • குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 நிதியுதவி, நாளை முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. குடும்பங்களின் துயரத்தை துடைப்பதற்காக வழங்கப்படும் நிதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தி விடாமல் இருப்பதை அரசு தடுக்க வேண்டும்.

    வழக்கமாக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் போது, அந்தத் தொகையின் பெரும் பகுதி குடும்பத்திற்கு செல்வதில்லை என்றும், குடும்பத் தலைவர்களின் வழியாக மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசுக்கே செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றனர்.

    தீபாவளி திருநாளுக்கு சில நாட்கள் முன்பாக கடந்த நவம்பர் 10-ந் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ.1138 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தநாளில் தொடங்கி 5 நாட்களில், தீப ஒளி திருநாளையொட்டி வரலாறு காணாத வகையில், ரூ.1000 கோடிக்கும் கூடுதலான மது விற்பனையானது. அதன் மூலம் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டதில் பெரும் பகுதி அரசுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.


    மழை-வெள்ளப் பாதிப்புக்காக வழங்கப்படும் ரூ.6,000 நிதியும் அதேபோல் மக்களுக்கு பயன்படாமல், மதுக்கடைகளுக்கு சென்று விடக் கூடாது. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது ரூ.25 ஆயிரத்தில் தொடங்கி சில லட்சங்கள் வரை வாழ்வாதார இழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு தான் இந்த இழப்பின் ஒரு பகுதியையாவது சரி செய்ய முடியும். மாறாக, வழக்கம் போல, நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் தொகை மீண்டும் மதுக்கடைகளுக்கு சென்றால், எந்த ஒரு குடும்பத்திலும் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது. அது அந்த குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

    தமிழக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுவதற்கும், மது வணிகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியாது. கடந்த காலங்களில் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை, வெள்ள நிவாரணம் என நிதியுதவி வழங்கப்பட்ட காலங்களில் எல்லாம் வணிகரீதியாக பயனடைந்தது மதுக்கடைகள் மட்டும் தான். தமிழ்நாட்டின் மது வணிகம் குறித்த புள்ளி விவரங்கள் இதை உறுதி செய்யும். அதனால், கடந்த காலங்களில் நடந்த அதே தவறு இப்போதும் மீண்டும் நடப்பதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்து விடக் கூடாது.

    எனவே, மழை நிவாரண உதவி வழங்கப்படவிருக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, புத்தாண்டு நாளான ஜன 1-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மட்டுமின்றி, அவற்றையொட்டிய பிற வட மாவட்டங்களிலும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப் படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது.
    • நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

    இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டலக் குழு தலைவர் தனியரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது? பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி உதயநிதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதியிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி முறையிட்டனர்.

    எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை விரைந்து சரி செய்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் முறையிட்டனர். கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.

    மீனவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

    • ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    திருநின்றவூர்:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    எனினும் திருநின்றவூர் நகராட்சியில் ஈசா ஏரியையொட்டி உள்ள ராமதாஸ்புரம் பெரியார் நகர், முத்தமிழ் நகர், பாரதியார் தெரு, கம்பர் தெரு, ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டனர்.

    இதேபோல் கொட்டாமேடு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை கால்வாய் அமைத்து கல்வெட்டு மூலம் வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இதனையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, கனமழையால் திருநின்றவூர் நகராட்சிக் குட்பட்ட 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈசா ஏரி 11.5 அடி உயரம் நிரம்பியது. இதனால் ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு மிச்சாங் புயலினால் 2 நாட்களில் 68 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலமும், கொட்டமேடு பகுதியில் தனியாக கால்வாய் அமைத்தும் வெளியேற்றப்படுகிறது என்றார்.

    • கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கி கணக்கில் தான் செலுத்தப்பட்டது.
    • டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாக பயன்படுத்தக்கூடும்.

    சென்னை:

    மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்து அதை தாமதப்படுத்த முடியாது என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ரொக்கமாக நிவாரணத்தை வழங்கும்போது முறையானவர்களுக்கு சென்றடையாது.

    கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கி கணக்கில் தான் செலுத்தப்பட்டது. டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாக பயன்படுத்தக்கூடும். பலர் ஒரு முறைக்கு மேல் நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.


    அரசு தரப்பில் ஏற்கனவே 37 லட்சம் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டு விட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது. மழை வெள்ளத்தால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால், நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்த முடியாது, அதை மறுக்க முடியாது. நிவாரணத்தை முடக்க முடியாது.

    நிவாரணம் வழங்குவது தற்போதைய தருணத்தில் உடனடி தேவை என்பதால் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்.

    நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல. உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். விசாரணையை ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

    அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    ×